மழை
இயற்கையின் வரம்
இறைவனின் கொடை !
காற்றாய் பறந்து
மேகமாய் கருவாகி
மழையாய்
தவழும்
இயற்கையின் குழந்தை !
முத்துப் போன்ற சிரிப்பை
முத்தாய் உதிர்த்து
நாடு செழிக்க செய்யும்
முத்துக் குழந்தை
!
பெரியோர் முதல் சிறியோர் வரை
செல்லமாயத் தொட்டு
கொஞ்சி விளையாடும்
செல்வக் குழந்தை !
பயிர் பச்சை செழித்தோங்க
பஞ்சம் பசி விலக
இயற்கை அன்னை பெற்றெடுத்த
அன்புக் குழந்தை !
உயிரினங்கள் வாழ
உயிர் கொடுக்க வல்ல
உன்னதக் குழந்தை !
மண்ணோடு மண்ணாய்
துள்ளிக் குதித்து விளையாடும்
செல்லக் குழந்தை !
குளம், குட்டை, நிரம்பிட
அருவிகள் ஆர்ப்பரிக்க நடனமிடும்
நாட்டியக் குழந்தை !
பருவங்கள் தவறாது
ஓடோடி வந்து இன்னல் தீர்க்கும்
இனியக் குழந்தை !
கோபம் கொண்டால் வெகுண்டெழுந்து
உலகையே அழிக்க வல்ல
வீம்புக்கார குழந்தை !
இயற்கையின் வரம்
இறைவனின் கொடை !